24 December 2014

உத்தம நபியின் உதயம்


வசந்த காலம் வந்துவிட்டது..
ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
ரபீஉன்என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது.
அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் ரபிஉல் அவ்வலில்பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும்,வெற்றியையும்,மகிழ்ச்சியையும்,மனநிறைவையும், பிரகாசத்தையும் கொண்டுவந்தார்கள்.

பிறப்பதற்கு முன்பே பிரகாசமாய்...
''அரபுப் பாலைவனத்தில் அரிய மாணிக்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது;
அதன் ஒளி அகிலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது ''
என்றான் ஆங்கிலக் கவிஞன்.
ஆம் உண்மைதான். ஆதம் அலைஹிஸ் சலாம் மண்ணிற்கும் தண்ணீருக்குமிடையில் இருக்கும்போதே ஒளியாக பிரகாசித்த பெருமானாரின் ஜோதி, பிறப்பின்போதும் காட்சி வழங்கி, வாழ்க்கையில் பல கட்டங்களில் பலருக்கும் பயன் தந்தது.

وَعَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ  " كَانَتْ رَوْحُهُ نُورًا بَيْنَ يَدَيِ اللَّهِ تَعَالَى، قَبْلَ أَنْ يَخْلُقَ آدَمَ بِأَلْفَيْ عَامٍ، يُسَبِّحُ ذَلِكَ النُّورُ، وَتُسَبّحُ الْمَلَائِكَةُ بِتَسْبِيحِهِ، فَلَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ، أَلْقَى ذَلِكَ النُّورَ فِي صُلْبِهِ "، فَقَالَ رَسُولُ  اللَّهِ صلي الله عليه وسلم: " فَأَهْبَطَنِي اللَّهُ إِلَى الْأَرْضِ فِي صُلْب آدَمَ، وَجَعَلَنِي فِي صُلْبِ نُوحٍ، وَقَذَفَ بِي فِي صُلْبِ إِبْرَاهِيمَ، ثُمَّ لَمْ يَزَلِ اللَّهُ تَعَالَى يَنْقُلُنِي مِنَ الأَصْلَابِ الْكَرِيمَةِ، وَالْأَرْحَام الطَّاهِرَةِ، حَتَّى أَخْرَجَنِي مِنَ أَبَوَيَّ، لَمْ يَلْتَقِيَا عَلَى سِفَاحٍ قَطُّ (الشفا باحوال المصطفي)


ஆதம் அலைஹிஸ்ஸலாமைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்னாரின் ஒளி அல்லாஹ்வை துதித்தவண்ணம் இருந்தது. ஆதமைப் படைத்து அவர்களின் முதுகந்தண்டில் அந்த நூரை செலுத்தினான். அதன் பிறகு அதன் நிலையை அண்ணலாரே விவரிக்கிறார்கள்: ஆதமின் முதுகந்தண்டின் மூலம் அல்லாஹ் என்னை புவியில் இறக்கினான். அதன் பின் நூஹ் அலைஹிஸ் ஸலாம், இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் இப்படியாக சங்கைக்குரியவர்களின் முதுகந்தண்டுகளிலும் பரிசுத்த கருவறைகளிலும் இறக்கி. பின்னர் என் பெற்றோர்கள் மூலம் என்னை அவதரிக்கச் செய்தான். அவர்கள் தீய நடத்தை உள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை 

நபி பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அப்துல் முத்தலிபின் உடல் அமைப்பைக் கண்டு எமன் நாட்டு யூதப் பண்டிதர் ஒருவர் உம் ஒரு கையில் ஆட்சியையும் மறு கையில் நபித்துவத்தையும் காண்கிறேன் என்று முன்னறிவிப்பு செய்த நிகழ்ச்சி:
عن ابن عباس ، عن أبيه ، قال : قال عبد المطلب : « قدمت اليمن في رحلة الشتاء ، فنزلت على حبر  من اليهود ، فقال لي رجل من أهل الزبور : يا عبد المطلب : أتأذن لي أن أنظر إلى بدنك ؟ فقلت : انظر ما لم يكن عورة . قال : ففتح إحدى منخري  فنظر فيه ، ثم نظر في الآخر ، فقال : أشهد أن في إحدى يديك ملكا ، وفي الأخرى نبوة ،وأرى ذلك في بني زهرة ، فكيف ذلك ؟ فقلت : لا أدري . قال : هل لك من شاعة ؟ قال : قلت : وما الشاعة ؟ قال : زوجة . قلت : أما اليوم فلا . قال : إذا قدمت فتزوج فيهن . فرجع عبد المطلب إلى مكة ، فتزوج هالة بنت وهب بن عبد مناف ، فولدت له : حمزة ، وصفية . وتزوج عبد الله بن عبد المطلب ، آمنة بنت وهب ، فولدت رسول الله صلى الله عليه وسلم
நான் ஏமனில் தங்கிருந்போது ஒரு வேதப் பண்டிதர் என் உடல் அமைப்பை ஆராய்ந்துவிட்டு, “அப்துல் முத்தலிபே! உமது ஒரு கையில் அரசாட்சியையும் மறுகையில் நபித்துவத்தையும் நான் காண்கிறேன். அது பனூ ஸஹ்ரா குடும்பத்திலிருந்து ஏற்படலாம் என்று கருதுகிறேன்” என்றார். “அது எப்படி?” என்று நான் கேட்டேன்.
“எப்படி என்று தெரியாது. ஆனால் இது நடக்கும். உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
“தற்போது இல்லை.”
“அப்படியானால் நீர் ஊர் திரும்பியதும் அந்தக் குடுபத்தில் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளும்.”
அப்துல் முத்தலிப் மக்கா திரும்பி ஹாலா பின்த் வஹ்ப் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்கள்.......... அப்துல்லாஹ் அவர்கள் திருமணம் செய்த ஆமினா பின்த் வஹ்ப் அவர்கள் பனூ ஸஹ்ரா குடும்பத்தில் உள்ளவர்கள்தான்.

பிறந்த அன்று...
மக்காவில் வாழ்ந்த ஒரு யூதன் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த அன்றிரவு குறைஷிகளின் கூட்டத்தில் வந்து இன்றிரவு உங்களில் யாருக்காவது ஒரு குழந்தை பிறந்துள்ளதா? என்று கேட்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒன்றும் நாங்கள் அறியவில்லையே/ என்றார்கள் குறைஷிகள். அவன் கூறினான்: நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். இன்றிரவு உங்களில் ஒரு நபி பிறந்துள்ளார். அவரின் இரு புஜங்களுக்கிடையில் ஒரு அடையாளம் இருக்கும். அதில் சில ரோமங்கள் இருக்கும்.....
இதைக்கேட்டு அவர்கள் ஆச்சரியத்துடன் கலைந்து சென்றனர். தங்கள் இல்லம் சென்று மனைவிமார்களிடம் இதுபற்றி விசாரித்தபோது அப்துல்லாஹ்விற்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும் முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த யூதனிடம் தெரிவிக்கப்பட்டபோது அவன் வந்து பார்த்தான். அந்த குழந்தையின் முதுகில் நபித்துவ முத்திரையின் அடையாளம் இருப்பதைக் கண்டு மயக்கம்போட்டு விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்து கூறினான்;
அல்லாஹ்வின்மீது ஆணையாக! நபித்துவம் பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து எடுபட்டுவிட்டது. குறைஷிகளே! உங்களுக்கு ஒரு மகத்தான ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போகிறது; அந்த செய்தி கிழக்கிலிருந்து மேற்குவரை பரவப் போகிறது. (دلايل النبوة للبيهقي)

நபியின் நட்சத்திரம் உதயமானதைக் கூட நன்கு அறிந்திருந்த யூத அறிஞர்கள் 

عن حسان بن ثابت ، قال : « إني لغلام يفعة ابن سبع سنين أو ثمان ، أعقل كل ما رأيت وسمعت ، إذا يهودي بيثرب يصرخ ذات غداة (1) : يا معشر يهود فاجتمعوا إليه وأنا أسمع ، قالوا : ويلك ما لك ؟ قال : طلع نجم أحمد الذي ولد به في هذه الليلة »(المطالب العالية لابن حجر العسكلاني)

ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கூறுகிறார்கள்:
நான் ஏழு எட்டு வயது சிறுவனாக- சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடிய பருவத்தில் இருக்கும்போது ஒருநாள் ஒரு யூதன் யத்ரிபின் (மதீனாவின்) வீதியில் நின்று அலறினான்: ''ஓ யூதர்களே!''
''
என்ன ஆயிற்று உனக்கு? (ஏன் இப்படி கத்துகிறாய்?) என்று மற்ற யூதர்கள் ஒன்று கூடி வினவினர்.
''
இந்த இரவில் பிறக்கும் 'அந்த குழந்தைக்கான' வின்மீண் வானில் தோன்றிவிட்டது'' என்றான்.

ஆமினாவின் பிரசவத்தை நேரில் கண்ட ஒரு பெண்மணியின் வாக்குமூலம்:

அன்று இரவில் இல்லத்திலிருந்த அனைத்தும் ஒளிர்ந்தன; வின்மீண்கள் எங்கே அவை என்மீது விழுந்து விடுமோ என்று நான் எண்ணுகிற அளவுக்கு  மிக நெருக்கமாக வந்தன:

عن عثمان بن أبي العاص ، قال : حدثتني أمي ، أنها شهدت ولادة آمنة بنت وهب رسول الله صلى الله عليه وسلم ، ليلة ولدته . قالت : « فما شيء أنظر إليه في البيت إلا نور ، وإني لأنظر إلى النجوم تدنو  حتى إني لأقول : ليقعن علي »

பிறக்கும்போதே கண்மூடிப் பழக்கத்தை மண்மூடிப் புதைத்த மாநபி:
பிறந்த குழந்தை கண் திறந்ததும் வானைப் பார்க்கக்கூடாது என்று குழந்தையை சட்டியைக் கொண்டு மூடி வைப்பர். அதுபோலவே இந்த குழந்தையையும் மூடிவைத்துவிட்டு காலையில் வந்து பார்த்தபொழுது என்ன அதிசயம் அந்த சட்டி இரண்டாகக் உடைந்து கிடந்தது நபியவர்களோ விழி திறந்தவர்களாக வானை நோக்கியவர்களாக இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டனர்.

பிறப்பு வியப்பு :
 காலிரண்டும் முந்தினதாகவும், வானத்தை பார்த்தவர்களாகவும், புன் சிரிப்புடையவர்களாகவும் கண்களில் சுருமா வும் எண்ணையும் போடப்பட்டவர்களாகவும் அவர்கள் உதித்தார்கள். இன்னும் மற்றவர்கள் காணக்கூடாதென்பதற்காக அவர்களின் இடது கரத்தால்  தன் இரகசிய இடத்தை மறைத்தவர்களாவும், கத்னா செய்யப்பட்டவர்களாகவும்  இன்னும் அல்லாஹ் ஒருவனே என்று சைக்கினை செய்வதற்காக தன் வலது கரத்தின் கலிமா விரலை உயர்த்தினவர்களாகவும் அவர்கள் பிறந்தார்கள்.
கடைசி நபி பிறந்தவுடன்,
Ø  இணை வைப்போர்களால் வணங்கப்பட்ட சிலைகள் குப்புற வீழ்தன.
Ø  சைத்தான்களின் தலைவன் இப்லீஸின் சிம்மாசனம் உடைந்தது.  அவன் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டான்.
Ø  உண்மை வந்து விட்டது என அறிவிக்கும் ைகையாக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட, வற்றிருந்த ஸமாவா எனும் சிற்றாறு பொங்கி ஓடத் துவங்கியது.
Ø  பொய் அழிந்து விடும்  என அறிவிக்கும் சமிக்கையாக காபிர்களால் பயன்படுத்தப்பட்ட, ஸாவா விலிருந்த ஓடிக்கொண்டிருந்த புஹைரா எனும் சிறு கடல் வற்றியது.  
Ø  ஆட்சி கைமாறி விட்டது என அறிவிக்கும் சைக்கினையாக கிஸ்ரா வின் கோட்டைகளும் 14 கொத்தலங்களும் தரையில் உடைந்து வீழ்தன.
Ø  ஆயிரக்கணக்கான வருடங்களாக அணையாமல் இருந்த, பாரிஸீகளால் வணங்கப்பட்டுக் கொண்டிருந்த தீ அணைந்து விட்டது.
Ø  சாஸ்திரிகளின் தவம் இயற்றும் மாளிகைகள் உடைந்தன
.சைத்தானும் அதன் குட்டிகளும் அண்டம் இழந்தன

நபி பிறந்தபொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்களின் தாயார் கண்ட அதிசயக் காட்சியை அவர்களே வர்ணிக்கிறார்கள்:
அந்த குழந்தை பிறந்து என் கரத்தில் வந்தபோது அந்த இல்லத்தின் மூலையிலிருந்து ஒரு அசரீரி முழங்கியது: “உம் இறைவன் உமக்கு அருள் புரிவானாக! ''
அதன் பின் அங்கு பிரகாசம் தோன்றியது. அதன் ஒளியில் சிரியாவின் கோட்டைகளெல்லாம் காட்சி அளித்தது

பிறந்தவர்களில் சிறந்தவர்:
எல்லா நபிமார்களையும் பிறந்ததற்கு பிறகு புகழ்ந்துப் போற்றுகின்ற அல்லாஹ் முத்தான முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்.

ஈசா நபியைப் பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னையை ஊரார் தூற்றியபோது அன்னையின் பரிசுத்த தன்மையை நிரூபிக்கும் வகையில் அவர்கள் தொட்டிலில் பேசியதை அற்புதமாக குறிப்பிடுகிறான்:

قال اني عبد الله آتاني الكتاب وجعلني نبيا
மூசா நபியை பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னை அந்த குழந்தையை ஒரு மரப் பேழையில் வைத்து நைல் நதியில் விட்டபோது அதைப் பத்திரமாகப் பாதுகாத்து கரைசேர்த்த அற்புதத்தைச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறான்۔
நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்۔ அது எப்போது?
அதுதான் அனைத்துலகுக்கும் முதல் மீலாது மாநாடு.
அல்லாஹ் நடத்திய முதல் மீலாது மாநாடு:
ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்ம உலகில் வைத்து ஒரு மாபெரும் மீலாது மாநாடு நடந்தது. நடத்தியவன் யார் தெரியுமா? அல்லாஹ். மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் யார் தெரியுமா? உலகைத்திருத்தவந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகள். சில ஆயிரம் பேர் கலந்துகொண்டாலே மாநாடு என்றால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்நிகழ்வு மாநாடுதானே?
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா?

واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)
பின்னால் ஒரு நபி வருவார். அவரை நீங்கள் நம்பவேண்டும்; அவருக்கு உதவியாக இருக்கவேண்டும்; என்று கேட்டதோடு மட்டுமின்றி இதில் நீங்கள் கையெழுத்திடுகிறீர்களா?என்றான். அனைவரும் இதை ஆமோதிக்கிறோம் என்றனர். அப்படியா இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்.” என்று தீர்மானம் போட்டுஅதை மிஃராஜ் இரவில் நடத்திக்காட்டினான். பைத்துல் முகத்தஸில் அனைத்து நபிமார்களும் கூடியிருக்க ஜிப்ரீல் அலை பாங்கு சொல்ல அதில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னபோது அனைவரும் அதை ஆமோதித்தனர்.

ஆதம் நபி முதல் அனைத்து நபிமாருக்கும் நமது நபியின் வருகை குறித்து அல்லாஹ் முன்னறிவிப்பு செய்திருக்கிறான்.

ஆதம் அலைஹிஸ் ஸலாம் : தன் தவறுக்கு வருந்தி பல வருடம் அழுதுகொண்டிருக்கும்பொழுது ஒருநாள் நினைவு வந்தது சொர்கத்தின் வாசலில் அல்லாஹ்வின் பெயெரோடு இன்னொரு பெயரையும் பார்த்தோமே அந்த முஹம்மதின் பொருட்டால் பாவமன்னிப்பு கேட்டால் என்ன? உடனே அவ்வாறு கேட்டார்கள்.
அல்லாஹ் வினவினான்:'' இதுவரை வராத அந்த முஹம்மதை உமக்கு எப்படி தெரியும்?''
''யா அல்லாஹ்..உன் பெயருடன் அவரின் பெயரை இணைத்திருக்கிறாயென்றால் நிச்சயம் உனக்கு நெருக்கமானவராக பிரியமானவராகத்தான் இருக்கவேண்டும்' என்று புரிந்துகொண்டேன்.'' ''ஆமாம், ஆதமே! அவர் அவர் இருதியாக வரவிருக்கும் இறைத்தூதர். அவர் பொருட்டால் உம்மை மன்னித்தேன்'' என்றான்.

நூஹ் அலை:
950 வருடம் பிரச்சாரம் செய்தும் 80 பேரைத் தவிர யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரச்சாரத்தின்போது அந்த மக்கள் நூஹ் நபியை நோக்கி கல் வீசி தொல்லை கொடுத்தனர்.'' யா அல்லாஹ்! எனது பணி தொய்வின்றித் தொடரவேண்டும். எனது சொல் மக்களைத் தொடவேண்டும்; ஆனால் அவர்களின் கல் என்னைத் தொடக்கூடாது. ஆகவே என்னை அவர்களின் கண்களை விட்டும் மறைத்துவிடு''
அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அன்றிலிருந்து அவர்கள் பிரச்சாரம் செய்தால் குரல் கேட்கும்; ஆள் தெரியாது. அப்படியும் அவர்கள் விடவில்லை. குரல் கேட்ட திசையை நோக்கி கல் வீசினர். மனம் நொந்த நபி அல்லாஹ்விடம் அழுதனர்:

رب لا تذر علي الارض من الكافرين ديارا
''இறைவா! காஃபிர்களில் யாரையும் பூமியில் விட்டுவைக்காதே''
அல்லாஹ் அதை ஏற்று சுனாமியை அனுப்பி காஃபிர்கள் அனைவரையும் அழித்தான். விசுவாசிகள் மட்டும் கப்பலில் காப்பாற்றப்பட்டனர். அதன் பிறகு அல்லாஹ் கூறினான்: நூஹே! களிமண் கொண்டு மண்பாண்டங்கள் செய்வீராக! பல நாள் பாடுபட்டு பல மண்பாண்டங்கள் செய்தார்கள்.'' நூஹே! இப்பொழுது நீரே அவற்றை உம் கையால் உடைத்துவிடுவீராக''.
''யா அல்லாஹ்.. என்ன இது? எத்தனை நாட்கள் ஈடுபட்டு எவ்வளவு பாடுபட்டு இவற்றை உருவாக்கினேன். அவற்றை எனது கையினாலே அழிக்குமாறு கூறுகிறாயே?''
''நூஹே! இந்த மக்களை எவ்வளவு பாடுபட்டு படைத்தேன். அத்தனைபேரையும் அழிக்குமாறு இறைஞ்சிவிட்டீரே?  நூஹே! பின்னால் ஒரு நபி வருவார். அவரது மக்களும் அவருக்கு எத்தனையோ தொல்லைகள் தருவர். ஆனாலும் ஒரு தடவைகூட அவர் 'யா அல்லாஹ் இந்த மக்களை அழித்துவிடு' என்று இறைஞ்சமாட்டார்.' இந்த மக்களை மன்னித்துவிடு; இவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இவர்களின் சந்ததிகளாவது ஏற்றுக்கொள்வர்' என்றுதான் கூறுவார்.''
நமது நபி வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் வருகை குறித்து நூஹ் அலைஹிஸ் சலாமுக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டான்.

இப்ராஹீம் அலை:
 நமது நபி வருவதற்கு சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே இப்ராஹீம்( அலை) இப்படி துஆ செய்தார்கள்:
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك۔۔۔۔
எப்படிப்பட்ட இப்ராஹீம் நபி தெரியுமா?
அல்லாஹ் அவர்களுக்கு வைத்த அனைத்து சோதனைகளிலும் பரீட்சைகளிலும் 100/100 மார்க் வாங்கியவர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: யா அல்லாஹ் நான் போதாது; என்னைவிட சிறந்த நபியை இறுதி காலத்தில் அனுப்பு. 

மூசா அலை: 
மூசா (அலை) ஒருமுறை இறைஞ்சினார்கள்: யா அல்லாஹ்! மஃது இப்னு அத்னான் என்ற கிளையாரில் நாற்பது பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் அழித்துவிடு''
''மூசா! நபிமாரின் துஆவை நான் ஏற்பது வழக்கம்தான். ஆனால் உமது இந்த வேண்டுகோளை மட்டும் நான் ஏற்பதாக இல்லை. ஏனெனில் அந்த கிளையாரிலிருந்துதான் எனது ஹபீப் (ஸல்) பிறக்கப் போகிறார்.  மூஸா! உமக்கு எதைப் பிரியப்படுவீரோ அதை எனது ஹபீபுக்கும் விரும்புவீராக! ஏனெனில் அவரது உம்மத்தின் சிபாரிசுகொண்டுதான் உமது உம்மத் சொர்க்கம் நுழையும்.''
''யா அல்லாஹ்! அப்படியானால் இந்த கலீமுக்கும் (அல்லாஹ்விடம் வசனித்தவர்) அந்த ஹபீபுக்கும் என்னதான் வித்தியாசம்?''
''மூசா!  தூர்சினாய் மலையிலே நின்று அல்லாஹ்வின் பேரொளியைப் பார்க்க ஆவலாய்க் காத்துக் கிடந்து கடைசியில் காணமுடியாமல் எழுபதாயிரம் திரைகளுக்கப்பாலிலிருந்தும் பார்க்கமுடியாமல்(فخر موسي صعقا) மயங்கி  விழுந்தவர்தான் இந்த கலீம்.
ஹபீப் என்றால் யார் தெரியுமா? தூங்கிக் கிடந்த தூதுவரை துயிலெழுப்பி ஏழு வானம் வரை உபசரிப்போடு அழைத்து வந்து நேருக்கு நேராய் சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர்தான் அந்த ஹபீப்'' என்று அல்லாஹ் விளக்கம் சொன்னான். அதனால்தான் மூசா அலை இந்த உம்மத்தில் பிறக்கவேண்டுமென்று ஆசைப்பட்டனர்.

முன் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட முத்தான நபி:
 ஏதஸ்ஸ மின்னந்தரே மிலேச்ச ஆச்சார்யண ஸமன்வித மஹாமத் இதுக்கியாத சிஷ்ய சாகா சமன்வித...
ஓர் அன்னிய நாட்டில் ஓர் சீர்த்திருத்தவாதி தன் சீடர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார். (பவிஷ்ய புராணம்: பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 5-8)

அந்த சீர்திருத்தவாதி மற்றும் அவரைப் பின்பற்றுவோரின் தன்மை குறித்து இவ்வாறு உள்ளது:
 லிங்க சேதி சிகா ஹீன சமச்சுருதாரி சதா ஷக உச்சலாபி ஸாவ பட்ஷீ பவிஷ்யதி ஜனோமம...
அவர்கள் லிங்க சேதம் சுன்னத் செய்திருப்பார்கள்; தலையில் குடுமி இருக்காது; தாடி வைத்திருப்பார்கள்; சப்தம் போட்டு (பாங்கு சொல்லி) அழைப்பார்கள். முஸ்லிம் என்று அறியப்படுவார்கள். (பவிஷ்ய புராணம்: பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 25)

பைபிளில் பெருமானார்:
ஏசுனாதர் தன் சீடர்களுக்கு சொன்னதாக பைபிளில் (யோவான் அதிகாரம் 16 வசனம் 7-13 வரை) வந்துள்ளது:
 ''நான் உங்களுக்கு சொல்வது உண்மை. நான் போவதே உங்களுக்கு நல்லது. போகாவிடில் தேற்றரவாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்..''.
 ''நான் உங்களுக்கு சொல்லவேண்டியவை இன்னும் பல உண்டு.ஆனால் அவற்றை உங்களால் தாங்க முடியாது. உண்மையின் ஆவியானவர் வந்தபின் உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் பேசுவதை தாமாக பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார். வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.''

 மூஸா (அலை) கூறியதாக ஒரு வசனம் பைபிளில் உண்டு. (உபாகமம் 18 அதிகாரம் 18 வசனம் 15):
''உன் தேவனாகிய கர்த்தர் உன் மக்களில் நின்றும் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்கு செவிமடுப்பாயாக''
இவ்வாறு தங்களின் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருப்பதை வேதக்காரர்கள் நன்கு அறிவார்கள்

الذين آتينهم الكتاب يعرفونه كما يعرفون ابنائهم

 ''ஒரு தந்தை தன் பிள்ளையை நன்கு அறிவதைப்போ வேதக்காரர்கள் நபியை நன்கு அறிவார்கள்.''

இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை வரலாற்றைப் வாசிக்கிற எல்லோரும் அறிவார்கள்.
  
அப்துல்லாஹ் இப்னு சலாமின் வாக்குமூலம்:
அப்துல்லாஹ் இப்னு சலாம். யூதப் பண்டிதர். வேத ஞானங்களைக் கரைத்துக் குடித்தவர். நபி மதினாவுக்கு வந்தபோது உடனே இஸ்லாத்தை தழுவினார். அதன் பிறகு சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தியும் சொல்லப்பட்டார். உமர்(ரலி) அவர்கள் ஒருமுறை கேட்டார்கள். வேதக்காரர்களாகிய நீங்கள் உங்கள் மகனை அறிவதைப் போல இந்த நபியை நன்கு அறிவீர்களா? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்: '' ம்ம்.. அதைவிட அதிகமாகவே அறிவோம்.
சிரியா துறவியின் வாக்குமூலம்:
சிரியாவில் ஒரு துறவியை சந்தித்து சில அரபுகள் பேசிக்கொண்டிருந்தபோது ''உங்கள் குலத்திலிருந்துதான் இறுதி நபி வருவார்; அவர் பெயர் முஹம்மது. அவரைப் பின்பற்றினால் வெற்றிபெறுவீர்கள்'' என்று அவர் சொன்னதைக் கேட்டு நாடு திரும்பிய அவர்கள் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கெல்லாம் ''முஹம்மது'' என்று பெயர் வைத்தனர்.     [ المعجم الكبير للإمام الطبراني ح/273- ج 17/111

 அக்தம் இப்னு சைஃபி

நபியவர்களின் வருகை குறித்து கேள்விப்பட்ட அக்தம் இப்னு சைஃபி தமீமி என்பவர் அதுபற்றி விசாரித்து வர தன் மகனை அனுப்பினார். திரும்பி வந்து மகன் கூறினார்: அவர் நற்குணங்களை ஏவுகிறார்; தீமைகளை தடுக்கிறார்'' என்று. உடனே அக்தம் தன் மக்களை ஒன்றுகூட்டி மக்களே! இவர்தான் நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இறுதி நபி. இவர் மீதுள்ள அன்பினால்தான் சுஃப்யான் பின் மஜாஷிஃ தன் மகனுக்கு முஹம்மது என்று பெயரிட்டார். أسقف نجران என்பவர் இந்த நபியின் வருகை குறித்துத்தான் அடிக்கடி பேசுவார். எனவே இவரை பின்பற்றுவதில் நீங்கள் முதன்மையாளரகளாக இருங்கள். பிந்திவிடாதீர்கள்.
 [ الإصابة في تمييز الصحابة للإمام ابن حجر 1/211 ]

இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிய.. இந்த இணைப்பை சொடுக்கவும் 

அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி(ஸல்)

உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராகமுகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும்வினாவையும் எழுப்பலாம். சமயஞ்   சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.



இன்னும் நிறைய அறிஞர்கள் அண்ணல் நபி பற்றிக் கூறியதை வாசிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்

கட்டுரையின் விரிவை அஞ்சி சில இணைப்புகளை இங்கே தருகிறோம். அவற்றை க்ளிக் செய்து மேலதிக தகவல்களை வாசிக்கலாம்..
  1. மானுட வசந்தம்-அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத் 
  2. நபிகள் நாயக் (ஸல்) பயோடேட்டா- புதுகை ஜமாத்துல் உலமா 
  3. வேந்தர் நபி பற்றி வேத அறிஞர்களின் சான்று-தொடர்-2
  4. அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)


குறிபுகளை அள்ளிக் குவித்தவர்கள்:
மவ்லானா ஷாகுல் ஹமீது ஃபைஜி
மவ்லானா சுல்தான் சலாஹி 
மவ்லானா அப்துர் ரஹ்மான் ஹசனி 
மவ்லானா முஃப்தி முஹம்மது தாஜுதீன் காசிமி 
மவ்லானா ஷைக் ஆதம் அவர்கள் 
மவ்லானா நசீர் மிஸ்பாஹி 
மவ்லானா ஃபைஜ் அஹ்மது அவர்கள் 


0 comments:

Post a Comment