10 March 2016

"ஹலால் ஹராம்"

அல்லாஹ்வின் அச்சமின்றி,ஹலாலை  ஹராமாக,ஹராமை ஹலாலாக,ஆகுமென கூறுவதற்கும்,திருத்துவதற்கும்,மாற்றுவதற்கும் எந்த மேதைக்கும் அதிகாரம் கிடையாது,தகுதியுமில்லை.
அல்லாஹ் சிலவற்றை கடைமையாக்கியுள்ளான்.அவற்றை கடந்து விடாதீர்கள்.சில எல்லைகள் வகுத்துள்ளான்.தாண்டிவிடாதீர்கள் சில
வற்றை  ஹராமாக்கியுள்ளான்.மீறி விடாதீர்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஹராமனவற்றால் வளர்ந்த எந்த சதையும் சொர்க்கம் போகாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا  
அல்லாஹ்வும்,ரஸூலும் ஒரு செயலை,கடைமையாக்கிவிட்டால்,
அவ்விஷயத்தில் (மாற்றமாக)  அபிப்ராயம் கொள்ள,எந்த முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை.எவர் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்கிறார்களோ,அவர்கள் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார்கள். (அல் குர்ஆன் 33:36)


ஆகுமானதும் தடை செய்யப்பட்டதும் 
தெளிவாக்கப்பட்டது.சந்தேகத்தின்பக்கம் நெருங்காதே 
   عن أبي عبدلله  النعمان بن بشير رضي الله عنهما قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : إن الحلال بين وإن الحرام بين ، وبينهما أمور مشتبهات ، لا يعلمهن كثير من الناس ، فمن اتقى الشبهات ،فقد استبرأ لدينه وعرضه ، ومن وقع في الشبهات وقع في الحرام ، كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ، ألا وإن لكل ملك حمى ، ألا وإن حمى الله محارمه ، ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله ، وإذا فسدت فسد الجسد كله ، ألا وهي القلب رواه البخاري ومسلم 
நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூ அப்துல்லாஹ் அன்நுஃமான் இப்னு பஷீர் (ரலீ)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஹலாலும்(ஆகுமானவை)தெளிவானது.ஹராமமும்(தடை
செய்யப்பட்டவைகள் )
தெளிவானது.இவ்விரண்டிற்கும் இடையே இவை ஹலாலானவையா?,அல்லது ஹராமானவையா? என்ற சந்தேகத்திற்கிடமான காரியங்களும் உண்டு.அவற்றை அனேகர் அறிந்து கொள்ளமாட்டார்கள்.எனவே எவர் சந்தேகத்திற்கிடமான காரியங்களிலிருந்தும் ஒதுங்கி இருக்கின்றாரோ,அவர் தனது தீனையும் கண்ணியத்தையும்,மரியாதையையும் காப்பாற்றிக் கொண்டவராவார்.மேலும் எவர் சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ அவர் ஹராமில் வீழ்ந்து விட்டவராவார்.அனுமதிக்கப்படாத ஒரு மேய்ச்சல் நிலத்தின் அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், அவை தடுக்கப்பட்ட அம்மேய்ச்சல் நிலத்தின் சென்று மேய்ந்து விடக்கூடிய   அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பனுக்கு அவர் ஒப்பாவார்.ஒவ்வொரு அரசனுக்கும் சொந்தமான ஒரு மேய்ச்சல் நிலம் உண்டு.அல்லாஹ்வுக்கும் மேய்ச்சல் நிலம்(ஹிமா),அவன் (அனுமதிக்காத ஹரமான) காரியங்களாகும்.
உடலில் ஒரு சதைப்  பகுதி உண்டு.அது சீராய் விடுமானால் உடல் முழுவதும் செம்மையாய் விடுகின்றது.அது கெட்டுவிடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது.அந்த சதைப் பகுதி இதயமாகும்.
(நூல் :புகாரி)
 இந்த  நபிமொழியும் மிக முக்கியமான "உஸூல்"எனும் மூலச் சட்டங்களை எடுப்பதற்கான கருவாகும்.இந்த நபிமொழியின்படி உலகப் பொருட்கள் எல்லாம் மூன்றே வகை.
1,ஹலால் 2,ஹராம் 3,சந்தேகதிற்குரியவை.முந்திய இரண்டும் குர்ஆன் ஹதீஸ் வழியே நன்கு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டதால்,அதில் பிற்சேர்க்கைக்கோ,மறுபரிசீலனைக்கோ வழி எதுவும் இல்லை.
மூன்றாவது குறிப்பிட்டுள்ள சந்தேகத்திற்கு உரியவை.நபி (ஸல்)அவர்கள் இரு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
1,சந்தேகத்துக்கிடமானவற்றை அல்லாஹ்விற்காக யார் தவிர்த்து வாழ்கிறாரோ அவர் மார்கத்தையும்,மானத்தையும் காப்பாற்றிக் கொள்வார்.
2,எவர் (முதல் விஷயத்திற்கு) மாற்றம் செய்கிறாரோ அவர் அடுத்தடுத்து தெளிவான ஹராம்களிலும் வீழ்ந்து விடுவார்.
மூன்று பொருட்களையும் விளக்கிய நபி (ஸல்)அவர்கள் இவற்றிற்கு காரணமான "கல்பு"எனும் உள்ளம் பற்றியும் அதன் மூலமே சீர்திருத்தமாயினும்,சீர்கேடாயினும் ஏற்படுவதையும் ஹதீஸின் இறுதிப் பகுதியில் தெளிவுப்படுத்துகிறார்கள்.
மார்க்கத்தில் சில விஷயங்கள் தெளிவாக ஹலால் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள், ஹலாலான வியாபாரம் போன்றவை. சில விஷயங்கள் தெளிவாக ஹராம் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக பன்றியின் இறைச்சி, வட்டியினால் வரும் வருமானம் போன்றவை. ஆனால் சில விஷயங்கள் ஹலால் என்றோ, அல்லது ஹராம் என்றோ தெளிவில்லாமல் இருக்கும். உதாரணமாக ஒருவருக்கு ஹலாலான வருமானமும் உண்டு. ஹராமான வருமானமும் உண்டு. அவர் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கினார். அது அவருடைய ஹலாலான வருமானத்திலிருந்து வந்ததா அல்லது ஹராமான வருமானத்திலிருந்து வந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பமான நிலையில் அந்த அன்பளிப்பை தவிர்ப்பதே நல்லது. அது ஹராமான இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அதை பயன்படுத்தத் துணிந்து விட்டால் நாளை ஹராமையே துணிவோடு செய்கின்ற நிலை ஏற்படலாம். ஹராம் என்பது வேலி. அந்த வேலிக்கு அருகில் கால்நடைகளை மேய்த்துப் பழகி விட்டால் ஒருநாள் அந்த வேலிக்கு உள்ளேயே செல்கின்ற துணிச்சல் பிறந்து விடும்.
 கூடுமா கூடாதா என்ற சந்தேகத்திற்குரிய விஷயங்களை தவிர்த்துக் கொண்டால் தான் ஒருவர் இறையச்சமுடையவராக ஆக முடியும்.
சில உணவுப் பொருட்களை அது ஹலாலா?ஹராமா?என கண்டறிவது கடினமாக இருக்கலாம்.அது ஹலாலா அழஅல்லது ஹராமா என முடிவு செய்து கொள்வது கடினமாக இருக்கலாம்.இப்படியாக சந்தர்ப்பத்தில் அந்த சந்தேகமான உணவை சாப்பிடாமல் இருப்பதே -தக்வா- அல்லாஹ்வின் அச்சமும் பேணுதலும் ஆகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:                                          
دع ما يريبك إلى ما لا يريبك                           
எதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதோ அதை விட்டு விடுங்கள்.எதில் சந்தேகம் இல்லையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.(நூல்:திர்மிதீ)   

நமக்கு முன்னால் வாழ்ந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் ஹரமானவற்றிலிருந்து மட்டும் தவிர்ந்து இருக்கவில்லை.மாறாக,சந்தேகமானவற்றிலிருந்தும் கூட மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

ஹலாலைப் பேணுவோம்:

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:                                                                 " كَسْبُ الْحَلالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ "

கடமையான வணக்கங்களுக்கு பிறகு ஆகுமான (ஹலாலான) வருமானத்தை தேடுவது கடமையாகும். (நூல்:பைஹகீ)

ஷத்தாது பின் அவ்ஸின் சகோதரி உம்மு அப்துல்லாஹ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:ஒரு நாள் நபி(ஸல்)அவர்கள் நோன்பு  திறப்பதற்காக ஒரு கோப்பையில் ஆட்டுப்பாலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினேன்.ஏனெனில் அன்றைய தினம் பகலும் நீளம்,வெயிலும் அதிகம்.ஆனால் நபி(ஸல்)அவர்கள் அதை பெற்றுக்கொள்ளாமல் அந்த ஆடு எப்படி கிடைத்தது?என்று விளக்கம் கேட்டு என்னிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.பிறகு நான் "என்னுடைய சொந்த பொருளிலிருந்துதான் அதை வாங்கினேன் என்று சொல்லி அனுப்பியவுடன் அதை அருந்தினார்கள்.மறுநாள் அவர்களிடம் வந்து,நான் உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பியபோது,ஏன் விளக்கம் கேட்டு அனுப்பினீர்கள்?என்று நான் கேட்டபோது நபி(ஸல்)அவர்கள்:

இவ்வாறு தான் இறைத்தூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி இவ்வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:
 يايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்;நல்ல காரியத்தையும் செய்யுங்கள்;நிச்சியமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன்.(அல் குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் "நற்செயல் புரியுங்கள்" என்பதற்கு முன்பாக "ஹலாலனவற்றை உண்ணுங்கள்"என்று இறைவன் சொல்வதற்கு காரணம்,ஹலாலவற்றை உண்பதின் மூலம்தான் நல்ல அமல்களுக்குரிய தவ்பீக் கிடைக்கும்.ஹராமான உணவால் நற்செயல் புரிவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் நற்காரியங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால்தான் ஸஹாபாக்கள் தெரியாமல் சாப்பிட்ட உணவையும் கூட பேணுதலுக்காக வாந்தி எடுத்தார்கள்.

ஹஸன் (ரலி) அவர்கள் (சிறு குழந்தையாக இருக்கும் பொழுது)

ஸதகாவாக வந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார்கள்.அதனைக் கண்ட நபியவர்கள்,சீ சீ,எனக்கூறி துப்பச் செய்து விட்டு,ஸதகாவின் பொருட்களை நாங்கள் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?என்றார்கள். (நூல்:புகாரி)

ஹராமான பொருளில் நின்றும் ஒரு பேரீத்தம் பழத்தைக்கூட தன் பேரன் உண்பதை நபியவர்கள் விரும்பவில்லை.

அந்நியர்கள் ஹலால் ஹராமை பேணமாட்டார்கள். அவர்களுக்கு இத்தகையோர் சட்டமும் இல்லை.ஆனால் நாம் ஒரு உணவை உண்ண வாங்குமுன் அது பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.இந்த உணவு எங்கிருந்து வருகிறது?எவற்றைக் கலப்படம் செய்து இது சமைக்கப்படுகிறது?இதில் ஹராம் கலந்துள்ளதா?என்பதையெல்லாம் நாம் அதை வாங்கு முன் கண்டறிய வேண்டும்.

காலை "பஜ்ர்"தொழுகைக்குப்பின் சற்று நேரம் "தஸ்பீஹ்,திக்ர்" செய்தப்பின்  "இஷ்ராக்" தொழுகையை நிறைவேற்றவேண்டும்:அப்பால் இறைவனிடம் தமது தேவைகளை "துஆ"க்களின் வாயிலாக கேட்டு விட்டு உலக அலுவல்களில் ஈடுபட வேண்டும் என்பது நபி(ஸல்)அவர்கள் வகுத்தவைகளில் ஒன்று.

ஹழ்ரத் அபூதுஜானா(ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாக பஜ்ர் தொழுதவுடன் தமது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.இதைக் கவனித்து வந்த நபி(ஸல்)அவர்கள் அபூதுஜானவை அழைத்து "உமக்கு இறைவனின் எந்தத் தேவையும் இல்லையா?என்று கேட்பார்கள்.

 அஅதற்கவர் "யாரசூலல்லாஹ் இறைவனிடம் எனக்கு நிரம்ப தேவைகள் இருக்கிறது"என்றார்.அப்படியானால் உமது தேவைகளை இறைவனிடமிருந்து கேட்டுவிட்டு போகாமல்,தொழுதவுடன் வீட்டிற்கு சென்று விடுகிறீரே!என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அபூதுஜானா (ரலி)அவர்கள் கூறினார்கள்:

"யாரசூலல்லாஹ் ! என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பேரீத்த மரம் நிற்கிறது.அந்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் படர்ந்து நிர்ப்பதால்,அதன் பழங்கள் என் வீட்டில் உதிர்ந்து விடுகிறது.அவைகளை என்னுடைய பிள்ளைகள் எடுத்து புசித்து விடுகிறார்கள்.அது அன்னியன் உடமை,அவைகளை என் குழைந்தைகள் தின்று விடுவதால் ஹராமான (விலக்கப்பட்ட)பொருளை உண்டவர்களாகி விடுகிறார்கள்.ஆதலால் நான் தொழுதவுடன் வீட்டிற்க்குச் சென்று என் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன் அப்பழங்களை எடுத்து அவர் வீட்டில் போட வேண்டியதாயிருக்கிறது:அதனால்தான் நான் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்க்குச் சென்று விடுகிறேன்.என்றார்கள்.

ஹழ்ரத் அபூதுஜானா(ரலி)அவர்களின் நேர்மையையும்,பேணுதலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் இதற்கொரு சரியான பரிகாரம் காண முயற்சித்தார்கள்.அந்த மரம் இருந்ததோ ஒரு "முனாபிக்"(முஸ்லிமை போல் நடிக்ககூடியவர்)வுடைய வீட்டில்.இறுதியில் அந்த மரத்தை அபூதுஜானாவுக்கே சொந்தப் படுத்திக் கொடுத்துவிட முடிவு செய்யப்பட்டது.

நபி (ஸல்)அவர்கள் ஒரு ஸஹாபியை மரச் சொந்தக்காரரிடம் அனுப்பி,அடுத்த வீட்டுக்காரார் அபுதுஜானாவுக்கு மரத்தை விற்றுவிடும்படி சொல்லுங்கள் என அனுப்பினார்கள்.அதற்கு அந்த முனாபிக் முடியாது என்று சொல்லிவிட்டார்.இரண்டாவது தடவை நபியவர்கள் தங்களுக்கே விலைக்கு தரும்படி கேட்டனுப்பினார்கள்.அதற்கும் அந்த முனாபிக் முடியாது என சொல்லிவிட்டார்.மூன்றாவது தடவையாக சுவர்க்கத்தின் ஒரு மரத்திற்கு பகரமாக தரும்படி கேட்டனுப்பினார்கள்.அதற்கும் முடியாது என்றே பதில் வந்தது.கடைசியாக மதினாவில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு தோட்டத்திற்கு பகரமாக அவர் வீட்டு முற்றத்தில் நிற்கக்கூடிய அந்த ஒரு மரத்தை மட்டும் தரும்படி கேட்டனுப்பினார்கள்.

  பேராசைக்கொண்ட அந்த முனாபிக் "ஒரு மரத்திற்குப் பதில் பத்து மரங்கள் கிடைக்கிறது.இந்த ஒரு மரமும் நமது வீட்டில்தான் நிற்கிறது.எனவே இரவோடு இரவாக வீட்டிலுள்ள மரத்தின் கனிகளையும் நாமே பரித்துகொள்ளலாம்.வெளியுலுள்ள மரங்களின் கனிகளும் நமக்கு கிடைக்கும்".என்று தம் மனதிற்குள் நினைத்தபடி நபியவர்களின் கடைசி கோரிக்கைக்கு இணங்கினார்.ஒப்பந்தப்படி தம் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை அபூதுஜனாவுக்கே விற்று விட்டார்.அடுத்த நாள் காலையில் மரம் அபூதுஜானவுடைய வீட்டு முற்றத்தில் நிற்பதைக் கண்டு முனாபிக் திடுக்கிட்டார்.

(நூல்:தப்ஸீருல் பஹவி)

  இச்சம்பவத்தில்,ஒரு தந்தை தன் பிள்ளைகளுடைய வளர்ப்பில் ஹலால் எது?ஹராம் எது?என்று சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார்கள் என்று தெரிய வருகிறது.

அன்றைய ஸஹாபாக்கள் அனைவருமே ஹலால், உடைய விஷயத்தில் பேனுதலாகவும்,ஹராமுடைய விஷயத்தில் எச்சரிகையாகவும் இருந்துள்ளார்கள்  

எனவே, நம்முடைய வாழ்கையிலும் ஹலால், உடைய விஷயத்தில் பேனுதலாகவும், ஹராமுடைய விஷயத்தில் எச்சரிகையாகவும் இருக்க வேண்டும்.

ஏன் ஹலால் அவசியம்? நாம் நினைத்த மாதிரி வாழ்வதற்கு நமக்கு உரிமை இல்லையா?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் படித்த பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் உங்களது அனுபவம் எப்படி? நீங்கள் நினைத்த மாதிரி அங்கே நடந்து கொள்ளலாமா? நினைத்தால் வகுப்புக்கு போகலாம், நினைத்தால் போகாமல் இருக்கலாம், ஆடை அணிந்தும் போகலாம் ஆடை அணியாமல் அம்மணமாகவும் போகலாம், நினைத்தால் ஒழுக்கமாக இருக்கலாம் நினைத்தால் தறிகெட்டதனமாக நடந்து கொள்ளலாம்… இப்படியெல்லாம் எங்காவது பாடசாலைகளில் ஒழுங்குகள் வரையறைகள் சட்டங்கள் கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியவைகள் செய்யக் கூடாதவைகள் என எதுவுமே இல்லாத நிலை காணப்படுகின்றதா?

அல்லது ஏதாவது ஒரு நாட்டில் நீ விரும்பிய மாதிரி வாழ்ந்து விட்டுப் போ! உனது விருப்பம் தான் எமது வெற்றி, விரும்பினால் கற்பழி! விரும்பினால் களவெடு! விரும்பினால் கொலை செய்! என்று அனுமதியிருக்கின்றதா?

அல்லது ஏதாவது மதங்களில் ஒருவன் தான் விரும்பியது போல் வாழலாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்ற நிலை காணப்படுகின்றதா?

நிச்சயமாக இல்லை, அங்கெல்லாம் சட்டங்கள் ஒழுங்குகள் வரையறைகள் செய்யக் கூடியவைகள் செய்யக் கூடாதவைகள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்றுதான் மனித வாழ்விலும் ஒழுங்குகள் வரையறைகள் காணப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அனஸ்(ரழி)அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டு விட்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் (அவரின்) ஐந்து வியூகங்கள் கொண்ட படையினரும் வந்துள்ளனர்” என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விட்டோமென்றால் எச்சரிக்கப்படுகிற அவர்களின் காலை நேரம் மிகக் கெட்டதாகி விடும்” என்று கூறினார்கள். எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன. (புஹாரி:2991…,முஸ்லிம்)

ஹராமை விட்டொழிப்போம்! 

ஹராம் என்று தீர்மானிப்பதற்கான காரணம்
அடுத்து ஒன்று ஹராமாகின்றது என்றால் அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்படும் போது அதனை பல வழிகளில் நோக்கமுடியும், மாறாக இஸ்லாம் தடை செய்வதற்கான காரணத்தை தெளிவாக கூறியிருந்தாலே தவிர ஒரு காரணத்தைக் கூற முடியாது. அந்த அடிப்படையில் தடைசெய்யப்படுவதற்கான காரணிகளை பின்வருமாறு நோக்கலாம்.

1- பிறருக்கு தீங்கிளைக்கக்கூடியது. (உ-ம்: கலவு, ஏமாற்று, வட்டி, கற்பழிப்பு….)

2- தனக்குத் தானே தீங்கிளைப்பது. (உ-ம்: போதைப் பாவனை, புகைத்தல் பாவனை, நச்சுப் பதார்த்தங்களைப் பாவிப்பது, விபச்சாரம், தற்கொலை….)

  " مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ ، فِي ثَمَنِهِ دِرْهَمٌ حَرَامٌ ، لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاةً مَا دَامَ عَلَيْهِ " ثُمَّ وَضَعَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ فَقَالَ : صَمْتًا إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُه 

مشکوة

ஒரு முறை உமர் (ரலி)அவர்கள் (தங்களின் மாணவர்களிடம்)ஒருவர் பத்து திர்ஹத்திற்கு ஒரு ஆடையை வாங்கினார்.ஆனால் அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும்,அந்த ஆடையை அணிந்திருக்கும் காலெமல்லாம் அருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.என்று கூறிவிட்டு தன் காதுகளில் விரல்களை நுழைத்து விட்டுச் சொன்னார்கள்:இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக நான் கேட்கவில்லை என்றால் என் காதுகள் செவிடாக்கட்டும்.(நூல்:அஹ்மத்) 
பாழும் மதுவும்:விண்வெளி பயணத்தில் (மிஃராஜ்)
என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன.அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது.மற்றொன்றில் மது இருந்தது.ஜிப்ரீல் (அலைஹி) அவர்கள் இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ,அதை குடியுங்கள் என்று கூறினார்கள்.நான் பாலை எடுத்துக் குடித்தேன்.நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள்.மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும் என்று சொன்னார்கள்.(நூல்:புகாரி)    

அனஸ்(ரழி)அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டு விட்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் (அவரின்) ஐந்து வியூகங்கள் கொண்ட படையினரும் வந்துள்ளனர்” என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விட்டோமென்றால் எச்சரிக்கப்படுகிற அவர்களின் காலை நேரம் மிகக் கெட்டதாகி விடும்” என்று கூறினார்கள். எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன. (புஹாரி:2991…,முஸ்லிம்)

ஒரு காலம் வரும் ஹலாலா?ஹராமா?என்பதை மனிதன் பொருட்படுத்த மாட்டான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:புகாரி)
இந்த மாதிரி காலங்களில் ஹராமுடைய விஷயத்தில் ரெம்ப கவனம் தேவை.
ஹராம் கலந்து விடக்கூடாது: 
நபிமார்களும்,ஸஹாபாக்களும் ஹராமான  பொருட்களைப் பாம்பின்  விஷத்தைப் போன்று கருதினார்கள்.ஒருவேளை அறியாமல் ஏதேனும் ஹராமான பொருள் உடலில் கலந்து விட்டால் கூட பாம்பின் விஷத்தை வெளியேற்றுவதைப் போன்றே அதை உடனடியாக வெளியேற்ற முயற்சிப்பவர்களாக இருந்தார்கள்.
عن عائشة رضي الله عنها قالت كان لأبي بكر غلام يخرج له الخراج وكان أبو بكر يأكل من خراجه فجاء يوما بشيء فأكل منه أبو بكر فقال له الغلام أتدري ما هذا فقال أبو بكر وما هو قال كنت تكهنت لإنسان في الجاهلية وما أحسن الكهانة إلا أني خدعته فلقيني فأعطاني بذلك فهذا الذي أكلت منه فأدخل أبو بكر يده فقاء كل شيء في بطنه 

ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு (பணிவிடை செய்த)நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூபக்கர்(ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து சாப்பிட்டு வந்தார்கள்.ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான்.அதிலிருந்து அபூபக்கர் சித்தீக் (ரலி)அவர்கள் சிறிது சாப்பிட்டார்கள்.அப்போது அந்த அடிமை அவர்களிடம்,"இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டான்.அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் இது என்ன?என்று கேட்டார்கள்.(அதற்கு)அவன்,"நான் அறியமைக்காலத்தில் ஒரு மனிதருக்கு குறி சொல்லிவந்தேன்.எனக்கு நன்றாக குறி சொல்லத்தெரியாது.ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து)அவரை நான் ஏமாற்றி விட்டேன்.அவர் அதற்காக எனக்கு கூலி கொடுத்தார்.நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக)எனக்கு கூலியாக கிடைத்த அந்தப் பொருளிலிருந்துதான்"என்று சொன்னான்.உடனே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தம் கையை (வாய்க்குள்)நுழைத்து தம் வையிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்து விட்டார்கள்.(நூல்:புகாரி)  

ஹராமானவைகள் தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறாதீர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்:

“எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்! அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்! மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.” (4:14).

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘நான் உங்களுக்கு எதைத் தடுத்துள்ளேனோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதை முடிந்த அளவு செய்யுங்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

எனவே அன்பு சகோதர, சகோதரிகளே மேற்கண்ட திருமறை வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் விளக்கங்களிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,

  • இறைவன் விதித்த ஹராம் மற்றும் ஹலாலைப் பேணுவதும் வணக்கமாகும்
  • இறைவன் ஹராம் என்று விலக்கியிருப்பதை மீறுவது இறைவனின் வரம்பை மீறியதாகும்
  • இறைவனின் வரம்புகளை மீறியோருக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றது
  • ஒருவர் இறைவன் ஹலால்-ஹராம் என விதித்திருப்பதை தம் சுய விருப்பத்திற்கு இணங்க, மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டவராக இறைவனின் வரம்புகளான ஹராம் – ஹலால் என்பதை மாற்றியமைப்பது இறை நிரகாரிப்பு ஆகும்
  • ஒருவர் இவ்வாறு மாற்றியமைத்ததைப் பின்பற்றுவது அவரை வணங்குவது போலாகும். இது மாபெரும் பாவமாகிய இணைவைப்பு ஆகும். இது இறைவன் நம்மைப் படைத்த நோக்கமான அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் பிறரை வணங்கியதாக ஆகிவிடும். (அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக)
  • தவறான வழிகாட்டுதலின் மூலமாக ஒருவர் வழிதவறிச் சென்றால் மறுமையில் அவருடைய பாவச் சுமையயையும் தம்முடையதுடன் சேர்த்து சுமக்க நேரிடும்.
  • இறைச்சட்டங்களில் விளையாடுவோர்களை நாம் புறக்கணித்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரியவர்களாக திருமறையையும், அல்-குர்ஆனின் வழிமுறைகளையும் பின்பற்றி வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்
அல்ஹம்துலில்லாஹ்!இன்று உணவுப் பொருட்கள் ஹலாலா,ஹராமா என்று பார்த்து வாங்கும் பேணுதல் உடையவராகவும்,உழைப்பிலும்,வியாபாரத்திலும் ஹலால் ஹராம் பேணுதல் உடையவராகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் வாழ்வில் பரக்கத்தை தந்தருள் புரிவானாக!ஆமீன்.

குறிப்புகளை குவித்தவர்:

மௌலவி நஸீர் மிஸ்பாஹி.

 

 

 

1 comments:

Post a Comment