21 March 2015

இக்கால இப்றாஹீம்கள்!

உலமாக்களே!
மதரசா எனும்
அரண்மனையில் பிறந்த
மவ்லவிகள் எனும் மன்னர்கள்
நீங்கள்.

குர்ஆன் கோட்டைக்குள்
ஹதீஸ் குடையின் கீழ்
கோலோச்சுகின்ற
காரணத்தால்
நாங்கள் உங்களுக்கு
குடிமக்கள்.



ஓதுதல் என்னும் நண்ணீர்
கொண்டு
உங்களின் இதயங்கள்
இருப்பதால்தான்
உங்கள் தூக்கம் கூட
தொழுகைக்கு சமம்.

நீங்கள் ருகூவுக்குப்
போகும் முன்
ரூஹே போனாலும் நாங்கள்
முந்தக் கூடாது.

சூரியன் உதிப்பதே நீங்கள்
சுப்ஹுக்கு எழுவதைக்
கண்டுதான்.

உலமாக்களே!
மதரசா சூளையில்
மலர்ந்த செங்கற்கள் நீங்கள்.
நீங்கள் அடிக்கல்லாக
அடுக்கப் படவில்லையானால்
இறையச்சக் கோட்டை
எழுவது எப்படி?

உலகம் முழுவதும் செல்ல
உங்களுக்கு தடையில்லை.
காரணம்,
நீங்கள் ஆன்மீகத்தில்
ஆசாத் விசா பெற்றவர்கள்.

உங்களைக்
கண்ணியப் படுத்தும்
போதெல்லாம்
நாங்கள்
புண்ணியப் படுத்தப்
படுகிறோம்.

தீனுக்கு எதிரென்றால்
தீக்குண்டத்திற்கும் அஞ்சாத
இக்கால இப்றாஹீம்கள் நீங்கள்.

உலமாக்களே!
நீங்கள் கூடினால்
அது எங்களுக்கு
தேன்கூடு.
நீங்கள் பேசினால்
அது எங்களுக்கு பேரீச்சம்
பழம்.

பலர் வருமானத்தால்
வளர்கிறார்கள்
தேய்வதற்காக...
நீங்களோ தேய்கிறீர்கள்
சமுதாய வளர்ச்சிக்காக!

உலமாக்களே! நீங்கள்
ஆடம்பர சாட்டைக்கு
ஆடாத பம்பரம்.
ஆன்மீக காற்று சேர
அகல விரியும் பாய்மரம்.

அல்லாஹ்வின் அருள்தனை
சுமந்திருக்கும்
அண்ணல் நபியின்
வாரிசுகளே !

உங்கள் மறை வாழ்க்கை
வெற்றி பெற
மனதாற வாழ்த்துகிறேன்!

0 comments:

Post a Comment